இன்று இரவு பிறக்கவுள்ள சார்வரி தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும்? நாம் நன்மை அடைய வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்!
சார்வரி தமிழ் புத்தாண்டு 2020 -21க்கான சித்த பஞ்சாங்கத்தின் படி இந்த வருடம் எப்படி இருக்கும். நமக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்றால் பொதுவாக என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
பொதுவான பரிகாரம்
தமிழ் வருடம் சார்வரி ஏப்ரல் 14ம் திகதி சப்தமி திதி, பூராடம் நட்சத்திரத்தில் மலரவுள்ளது. பூராடம் என்றால் சற்று போராட வேண்டி இருக்கும். அதனால் சார்வரி வருடமாக 2020 -21 சற்று அலைச்சல்களுடன் கூடியதாக அனைவருக்கும் இருக்கும். விகாரி ஆண்டில் பல இன்னல்கள் சந்தித்துள்ள நிலையில், வரும் சார்வரி ஆண்டை சமாளிக்க பரிகாரங்கள் வழிபாடுகளை செய்வது அவசியமாகிறது.
எனினும் நாம் செய்யக் கூடிய அன்றாட பூஜைகள் மூலம் நமக்கு நல்ல மாற்றத்தைப் பெற முடியும். இந்த முறை உலகத்திலுள்ள அனைவருக்கும் சில பிரச்சினைகள் வந்தது. இப்படி நாம் நாட்டிற்கு ஒரு பிரச்னை வரும் போது, நாம் ஒவ்வொரு ஊரின் எல்லையில் இருக்கும் காவல் தெய்வத்திற்கு மிக முக்கியமாக பூஜைகள் செய்வது அவசியம். அப்படி செய்தால் தான் உலகம் சுகமடையும் உலத்தில் உள்ள நாமும் நலம்பெற முடியும். ஒவ்வொருவரும் இந்த ஊர் எல்லையில் இருக்கும் காவல் தெய்வங்களான அம்மன், அய்யனார், கருப்பு சாமி, முனீஸ்வரர் உள்ளிட்ட தெய்வத்திற்கு பூஜைகள் செய்து பிரசாதம் கொடுப்பது மிக அவசியம். அம்மன் தெய்வம் இருந்தால் நிச்சயம் சீர்வரிசை கொடுக்க வேண்டும். அதாவது புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், தேங்காய், வெற்றிலை பாக்கு, எலுமிச்சை, நைவேத்தியம் செய்வது அவசியம்.
கருப்பன சுவாமி, அய்யனார்உள்ளிட்ட தெய்வங்களுக்கு வேட்டி, துண்டு மற்றும் பூஜை சாமான்கள் நைவேத்தியம் வைத்து பூஜை செய்து வழிபடுவது மிக அவசியம். இப்படி ஊர் எல்லையில் உள்ள தெய்வங்களுக்கு குடும்பத்துடன் சென்று பூஜை செய்து குடும்பத்திற்கும், நாட்டிற்கும் எந்த பிரச்னையும், தொந்தரவும் வரக் கூடாது என வேண்டிக் கொள்ள வேண்டும். இது போன்று செய்வதால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பிரச்னையை தீர்க்க தெய்வங்கள், சித்தர்கள், மகான்கள், குரு மார்கள் மற்றும் எல்லா தேவர்களின் அருள் கிடைக்கும். அதனால் நம் இக்கட்டான சூழல் மாறும். நமக்கான அலைச்சல் குறையும், நாட்டிற்கும் வீட்டிற்கும் எந்த பிரச்னையும் வராது என்பது நம்பிக்கை. இருப்பினும் தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், இந்த தடை உத்தரவு முடிந்த பின்னர் நாம் இந்த பூஜை முறைகளை மேற்கொள்ளலாம்.
வீட்டில் செய்ய வேண்டிய பூஜை முறை
இன்றைய தினம் வீட்டை சுத்தம் செய்து கொள்ளுங்கள். சித்திரை 1 ஆம் திகதியான ஏப்ரல் 14 ஆம் திகதி காலை 7.30 மணிமுதல் 9 மணி வரை உள்ளது. அந்த நேரத்தில் நாம் வீட்டில் பூஜைகளை மங்களகரமாகச் செய்து கொள்வது நல்லது. வீட்டு வாசலில் நன்றாக தெளித்து கோலம் போட்டு பூ அலங்காரம் செய்து அதன் நடுவே ஒரு விளக்கு பூமா தேவிக்கு வைப்பது நல்லது. வீட்டில் தோரணமாக மாவிலை, வேப்ப இலை கட்டுதல் நல்லது. வீட்டில் பூஜை செய்யும் போது வெற்றிலை பாக்கு பழங்கள், நைவேத்தியம் வைத்து முதலில் பூமாதேவிக்கு பூஜை செய்யுங்கள். வீட்டில் வாசலில் இரு விளக்கு ஏற்றுவும்.