நான்கு நாட்கள் டெஸ்ட்; சச்சின் சொன்ன கருத்து!
ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியை நான்கு நாட்களாகக் குறைப்பது குறித்து ஐ.சி.சி. பரிசீலனை செய்து வருகிறது. இங்கிலாந்து, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியவை வருமாறு-
‘‘டெஸ்ட் போட்டிகளின் ஐந்தாவது நாள் ஆட்டம் சுழல்பந்து வீச்சாளர்களுக்குரியது. அன்றையநாள்தான் அவர்களின் நாள். ஆடுகளத்தின் கடினத்தன்மை குறைந்து வெடிப்புகள் உருவாகும். இது சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும். இதை சுழற்பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். எனவே, சுழற்பந்து வீச்சாளர்களின் சாதக நேரத்தைப் பறிப்பது நியாயமா?
ஒருநாள் கிரிக்கெட் இருக்கிறது. இருபது-20 கிரிக்கெட் இருக்கிறது. தற்போது பத்து ஓவர் கிரிக்கெட்டும் வந்துள்ளது. இனி நூறு பந்துகள் கிரிக்கெட்டும் வர இருக்கிறது.
ஆனாலும், கிரிக்கெட்டில் டெஸ்ட்தான் எப்போதுமே தூய்மையான வடிவம். அதில் கறை பட்டுவிடக்கூடாது’’ என்றார்.