கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த 70 வயது முதியவரின் இறப்பு சான்றிதழிலை மாற்றி எழுதிய பிரபல மருத்துவமனை..!!
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த 70 வயது முதியவரின் இறப்பு சான்றிதழில் அவர் இதய கோளாறால் உயிரிழந்ததாக டெல்லி ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கஜூரி பகுதியைச் சேர்ந்தவர் 70 வயதுடைய முதியவர் ஒருவர் லொரி டிரைவராக பணியாற்றி வந்தார். கடந்த மே மாதம் 2 ஆம் திகதி அவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் ஏற்பட்டு டெல்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர் அந்த மருத்துவமனையில் இருந்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த மே 4 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆனால் அவரது இறப்புச் சான்றிதழில் இதய நோய் கோளாறு காரணமாக உயிரிழந்து விட்டதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டும் இன்றி, கடந்த 2008 ஆம் ஆண்டு எய்ட்ஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியான நிலையில் அது தொடர்பாக இறப்புச் சான்றிதழில் மருத்துவமனை நிர்வாகம் எதுவும் அறிவிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.