சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தையுடன் பிரிந்து சென்ற மனைவி… அவமானத்தை தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன்!
இந்தியாவில் திருச்சி அரியமங்கலத்தின் காமராஜ் நகரை சேர்ந்த 27 வயதுடைய பிரபு என்பவர் மிட்டாய் கடை நடத்தி வந்தார். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பிரபு, தாமினி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் சொகுசு வாழ்க்கை வாழ தாமினி ஆசைப்பட்டார். இதனால் தம்பதியினருக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
மிட்டாய் கடையில் வருமான குறைவாக இருப்பதால் பிரபுவால், தாமினி ஆசைப்பட்ட பொருட்களை வாங்கிக் கொடுக்க இயலவில்லை. இதனால் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் தாமினி, தனது குழந்தையை தூக்கிக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பல முறை தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து வர முயன்றும் பிரபு முடியவில்லை. இந்நிலையில் மன வேதனை அடைந்த பிரபு, கடந்த 21 ஆம் திகதி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், விரைந்து அவரை காப்பாற்றி, திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, பிரபு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரியமங்கலம் பொலிஸார் விசாரணையை நடத்தினர். அந்த விசாரணையில் பிரபு 3 பக்கம் எழுதி வைத்த கடிதம் ஒன்று பொலிஸார் கையில் சிக்கியது.
அந்த கடிதத்தில், ‘ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி, கோபித்துக் கொண்டு குழந்தையுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார், சமாதானம் பேசி அழைத்து வரச்சென்ற போது மனைவியின் அத்தை சந்திரா என்பவர் தன்னை அரசு ஊழியர் என்று கூறி 10 பேருடன் வந்து என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று மிரட்டினார். சம்பவ தினத்தன்று என்னுடைய இரு சக்கரவாகனத்தையும் சாவியையும் பறித்துச்சென்று விட்டனர். இதனால் ஏற்பட்ட அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை, அப்பாவி ஆண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்துக்கு இது சமர்ப்பணம் என எழுதி வைக்கப்பட்டிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக, மனைவி தாமினி, மாமனார் கருணாநிதி , உட்பட 7 பேர் மீது அரியமங்கலம் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.