தாலியை அடகு வைத்து கணவனின் இறுதிச்சடங்கு செய்து முடித்த மனைவி..!!
இந்தியாவில் கர்நாடகாவைச் சேர்ந்த உமேஷ் ஹடகள்ளி என்பவர் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதங்களாக செய்து வந்த இடைவிடாத கொரோனா வைரஸ் தடுப்பு அவசரப்பணி காரணமாக மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் அவரின் இறுதிச்சடங்கு செய்யக்கூட அவர் மனைவியிடம் பணம் இல்லாத காரணத்தால் மனைவி தனது தாலியை அடகுவைத்து இறுதிசடங்கு செய்தார்.
மேலும் இந்த நிலையில் 12 மற்றும் 7 வயது பிள்ளைகள் இருக்கும் தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் முறையிட்டிருந்த அவரது மனைவியின் கோரிக்கை ஏற்று, 5 இலட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்குவதாகவும், காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட ஊழியருக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் விரைவில் கிடைக்க உறுதியளிப்பதாகவும் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ் எடியூரப்பா அறிவித்திருக்கிறார். கடந்த மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் கணவர் மிகவும் சிரமப்பட்டு வந்ததாக அவரது மனைவி தெரிவித்திருந்த நிலையில் அரசின் இந்த உதவி அவருக்கு ஆறுதலையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.