19 வயதில் கைது; 46 வயதில் மரணம்! 28 வருடங்களை சிறையில் கழித்த கைதியின் சோகம்!!
மட்டக்களப்பு மொறக்கொட்டான்சோலை தேவாலய வீதியைச் சேர்ந்தவர் செல்லப்பிள்ளை மகேந்திரன். இவர் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்து, பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகி பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டார். 1993 ஆம் ஆண்டு செம்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டபோது, இவருக்கு வயது 19ஆக இருந்தது.
கைதான இவரை அவ்வப்போது சிறைச்சாலைக்குச் சென்று அவரது பெற்றோர் பார்வையிட்டு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் முதுமை மற்றும் உடல்நிலை சீரின்மையால் காலமானார்கள். அவர்களது மறைவைத் தொடர்ந்து மகேந்திரனைப் பார்க்க எவரும் சிறைக்குச் செல்வதில்லை.
இதேவேளை, 600 பொலிஸாரைச் சுட்டுக்கொலை செய்த குற்றச்சாட்டில், ஆயுள் தண்டனையுடன் 50 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தமையால் தொடர்ந்து சிறையிலேயே காலத்தைக் கழித்து வந்தார் மகேந்திரன்.
இந்நிலையில், அவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டது. இதனால் கடந்த சில வாரங்களாக அவதிப்பட்டு வந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் புத்தாண்டு தினத்தன்று (01) இரவு மரணத்தைத் தழுவினார். இறக்கும்போது அவரது வயது 46 என்பது குறிப்பிடத்தக்கது.