கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 ஆயிரம் நிதி திரட்டிய மகாத்மா காந்தி
அண்மையில் கேரளாவில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதில் பல கோடி ரூபாய்கள் வரை கேரளாவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரம் பல்வேறு தரப்பினரும் வெள்ளத்தால் அழிவடைந்துள்ள கேரளாவின் மக்களுக்கு நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். இவ்வாறான ஒரு வெள்ளப் பெருக்கு 1924-ஆம் ஆண்டும் கேரளாவில் ஏற்பட்டிருந்தது. அப்போதைய வெள்ளப்பெருக்கின் போதே மகாத்மா காந்தி 6 ஆயிரம் ரூபா வரையான நிதியைத் திரட்டி வழங்கியுள்ளார்.
இத் தகவலை கேரள வெள்ள இடர் நிவாரணத்திற்காக அமைக்கப்பட்டுள்ள இணையத்தளத்தில் கேரள அரசு பதிவிட்டுள்ளது.
1924-ஆம் ஆண்டிலும் கேரளாவில் இவ்வாறானதோர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தது. அவ் வெள்ளப் பெருக்கின்போது மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குமாறு மகாத்மா காந்தி கோரிக்கை விடுத்திருந்தார். அவரது நவஜீவன், யங்இந்தியா போன்ற பத்திரிகைகளிலேயே அவ் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இவ் வேண்டுதலை ஏற்று பலர் நகைகள், பணம் என உதவி செய்தனர். இவ்வாறு சேர்க்கப்பட்ட 6 ஆயிரம் ரூபாவையே அப்போது மகாத்மா காந்தி வெள்ள நிதியாக வழங்கியுள்ளார்.