மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீடிப்பு..
மலேசியாவில் விதிக்கப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டுப் பிரதமர் முஹிதீன் யாசின் தெரிவித்துள்ளார். கொடிய கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மலேசியர்களை வீட்டிலிருக்கும் படி அவர் கேட்டுக்கொண்டார். நாளுக்கு நாள் மோசமடைந்துவரும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர ஒரே வழி இதுதான் என திரு. முஹிதீன் கூறினார்.
பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்ற நோக்கத்துடன் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக முன்னதாகவே அறிவிக்க முடிவெடுத்ததாக அவர் சொன்னார். மலேசியாவில் அதற்கு முன் கடந்த 18 ஆம் திகதி இருந்து எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி மலேசியர்கள் வெளிநாட்டிற்குச் செல்வதும் வெளிநாட்டவர்கள் மலேசியாவுக்குள் நுழைவதும் தடை செய்யப்பட்டிருந்தது. அத்தியாவசியச் சேவைகள் வழங்கும் இடங்களைத் தவிர மற்றவை மூடப்பட்டுள்ளன.
மலேசியாவின் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவை மீறுபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக 1,000 ரிங்கிட் அபராதமும் ஆறு மாதச் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். மலேசியாவில் இதுவரை 1,796க்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அங்கு வைரஸ் தொற்றுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர்.