தலித் மாணவிகள் கோவிலில் நடனமாட தடை விதித்த நிர்வாகம் – நவீன தீண்டாமை என பலரும் விசனம்
நாகப்பட்டினம் அருகே அரசாங்க உதவியுடன் இயங்கும் பள்ளியில் கல்வி பயின்ற 3 மாணவிகள் நவீன தீண்டாமைக்கு ஆளானதாக பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, நாகை செட்டிபுலத்தில் அரசாங்க உதவியுடன் இயங்கிவரும் நடு நிலைப் பள்ளியில் சமீபத்தில் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ந்துள்ளது.
இவ் ஆண்டு விழாவில் சிறப்பாக நடனமாடிய 3 மாணவிகளது நடனத்தினால் கவரப்பட்ட கிராம மக்கள், அம் மூவரையும் தம் கிராம கோயில் திருவிழாவில் நடனமாடுவதற்காக அழைத்திருந்தார்கள். ஆலயத்திற்குச் சென்ற மூன்று மாணவிகளையும் மேடையில் ஏறுவதற்கு தடை விதித்த ஆலய நிர்வாகம், அம் மூவரும் தலித் என்ற காரணத்தினால் ஆலயத்தினை விட்டு விரட்டியுள்ளார்கள்.
இச் சம்பவத்தால் மனமுடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தினரிடம் முறைப்பாடு செய்தும் சரியான தீர்வோ/ பதிலோ பள்ளி நிர்வாகத்தினரல வழங்கப்படவில்லை, இதனால் தம் பிள்ளைகளுக்கு நீதி கிடைக்காத, பாரபட்சத்துடன் தம் பிள்ளைகள் நடத்தப்படுவது தொடர்பில் கரிசனை கொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் கீழ் குழந்தைகள் கல்வி பயில்வது எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல நோக்கில் மாற்றுச் சான்றிதழுடன் பெறோர் வேறு பள்ளியில் இந்த மாணவிகளை சேர்த்துள்ளமை நாகையில் தற்போது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.