ஆபாச வெறி கொண்டு ஆன்லைனில் அலைபவரா நீங்கள்? கண்டிப்பா 1 நிமிடம் இதைப் படியுங்க!!
அன்பிற்குரிய சொந்தங்களே.. எல்லோரும் நல்லா இருக்கீங்களா?
உங்க எல்லோருக்கும் அட்வைசு செஞ்சு எழுதுமளவிற்கு நான் ஒன்னும் அப்பாடக்கர் இல்லைங்க. என் மனசில பட்ட சில விசயங்களை உங்க கூட பகிர்ந்துக்கலாம் எனும் நோக்கில் இந்தப் பதிவினை எழுதுகின்றேன். வாங்க பதிவுக்கு போகலாம். எம் தமிழர்களிற்கு என சில தனித்துவமான இயல்புகள் உள்ளன. அவ் இயல்புகள் உலகினில் வாழும் ஏனைய இன மக்களுக்கு இல்லாத தனித்துவ இயல்புகள் என்றும் கூட சொல்லிக்கலாமுங்க.
தமிழர்கள் பூர்வீகமாக அதிகளவில் செறிந்து வாழும் நம்ம தமிழ் நாடும், இலங்கையும் ஏன் இன்னமும் உலகின் ஏனைய நாடுகளோடு ஒப்பிடும் போது பெரும் வளர்ச்சியடையவில்லை அப்படீன்னு யாராச்சும் என்னைக்காச்சும் நெனைச்சு பார்த்திருக்கீங்களா? வாருங்க..உட்கார்ந்து பேசுவோம். நான் ரூம் போட்டு யோசித்து பார்த்தேனுங்க. ஒரு சில உண்மைகள் என் மனதில் தென்பட்டது. தமிழர்களிடம் பாலியல் வெறித்தனமும், மூட நம்பிக்கைகளும், முட்டாள் தனமான அரசியல் வெறியும் இருக்கும் வரை தமிழினம் இந்த ஜென்மம் அல்ல, இன்னும் இருபது ஜென்மம் எடுத்தாலும் உருப்படாதுங்க.
“மறைக்கின்ற பொருளுக்குத் தான் மதிப்பதிகம் என்பார்கள்” இது கவிஞர் வைரமுத்துவின் வரி. இந்த வரியைப் படிச்சனும் அச்சச்சோ நீங்க எல்லா தமிழர்களையும் கலாச்சாரத்தை பத்தி கவலைப்படாது மறைக்காம வீதி உலா வாங்கன்னு சொல்றாருன்னு தப்பா நெனைச்சுப்புடாதீங்க. வெள்ளைக்காரனைப் பொறுத்த வரை ஒவ்வொரு மனித உணர்வுகளுக்கும் தனியான நேரம், தனியான நாள், தனித்துவமான அம்சங்கள் எனப் பல உண்டு. நம்ம ஊரில வயசுக்கு வந்ததும் பொண்ணுங்க கூட நாம பேசவே முடியாது. பொண்ணுங்களும் நம்ம கூட பேசமாட்டாங்க.
நம்மாளுங்க கலாச்சரத்தின் பெயரால் செய்யும் மிக மிக இழிவான மூட நம்பிக்கை ஆணையும் பெண்ணையும் நண்பர்கள் போல பழக அனுமதிக்காது ஓர் ஆணுடன் பெண் பேசுவதோ அல்லது பெண்ணுடன் ஆண் பேசுவதோ தவறு என்று கூறி காமக் கண் கொண்டு ஆணும் பெண்ணும் பேசினால் காமத்துடன் நோக்குகின்றது எம் சமூகம். ஆண்களும் பெண்களும் சின்ன வயசு முதல் ஒன்னாக கல்வி கற்கும் காலத்தில நம்ம சமூகம் எதிர்த்தாப்பில இருக்கிற ஸ்கூல் பொண்ணை எதிர்ப்பாலின ஆளாகச் சித்தரிக்கின்றதேயன்றி அந்தப் பெண்ணும் சக மனுசி – சக தோழி எனும் உண்மையினை உரைத்து சகஜமாக ஆணையும் பெண்ணையும் பழக அனுமதி வழங்க மறுக்கிறது எம் சமூகம்.
இங்கே சகஜமாக என்றோர் வார்த்தையினை பார்த்ததும் நீங்க விபரீதமான அர்த்தத்தில் இரட்டை அர்த்தத்துடன் நீங்கள் நோக்கினால் நான் அதற்கு பொறுப்பாளி கிடையாது. ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகுறாங்க என்று சொன்னாலே அட.. அவர்கள் தம் பாலியல் தேவையினை நிறைவேற்ற தான் பழகுறாங்க என்று பேசிக்கிறது நம்ம சமூகம். சின்ன வயசில இருந்து எதிர்ப்பாலாரை இவர் நீ திருமணம் செய்யப் போகும் எதிர்ப் பால் வர்க்கம் எனக் கூறி கூறியே ஒரு மாணவனை காமுகன் போல எதிர்த்தாப்பில இருக்கும் பெண்ணை பார்த்து சிந்திக்க வைக்கிறது எம் சமூகம்.
ஆணைப் பெண் சக மனுசனாகவும், பெண்ணை ஆண் சக மனித ஜென்மமாகவும் உணரும் காலம் என்னைக்கு நம்ம நாடுகளில் வருதோ அன்னைக்கு அலுவலகங்களில் நடக்கும் பாலியல் கொடுமைகள், பாலியல் வல்லுறவுகள், ஆபாச வெறி கொண்டலையும் தமிழர்களின் உணர்வுகள் யாவும் ஒடுங்கி தமிழன் நாட்டை முன்னேற்றுவது பத்தி சிந்திக்க ஆரம்பிப்பானுங்க. அப்படி ஒரு நாள் வருமா? வருமா? சொல்லுங்கள்!!