வீதியில் அதிரடியாக இறங்கி கைகளால் கழிவுகளை அகற்றிய பெண் தலைமை காவலர் மீனா..! குவியும் வாழ்த்துகள்…!!
மதுரை அருகே உள்ள தாமரை தொட்டி பகுதியில் போக்குவரத்து பணியில் நின்ற பெண் காவலர் ஒருவர் செய்த செயல் குறித்த பகுதி மக்களின் பாராட்டை பெற்றுள்ளது. புதூர் பகுதியில் இருந்து தல்லாகுளம் நோக்கி 5 ஆயிரம் முட்டைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஒன்று முன்னால் சென்ற வாகனத்தில் மோதாமல் இருக்க ஆட்டோவை நிறுத்த முயன்ற போது அத்தனை முட்டைகளும் கீழே விழுந்து உடைந்துள்ளது.
ஆட்டோ ஓட்டுனரோ அவற்றை சுத்தம் செய்யாமல் சென்றதால் குறித்த பகுதியால் சென்ற மோட்டர் சைக்கிள்கள் பல விபத்துக்குள்ளானதுடன் பலர் காயமடைந்த நிலையில் போக்குவரத்தும் பாதிக்கப் பட்டது. குறித்த பகுதிக்கு வந்த போக்குவரத்து பெண் தலைமை காவலர் மீனா அதிரடியாக செயற்பட்டுள்ளார்.
வீதியில் மீண்டும் விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்காக முட்டை கழிவுகளை கைகளால் அள்ளி அகற்ற தொடங்கி உள்ளார். முட்டையின் உடைந்த துண்டுகள் கைகளில் குத்திய போதும் கண்டுகொள்ளாத மீனா நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் முட்டை கழிவுகளை அகற்றியுள்ளார். குறித்த பகுதியால் சென்ற ஆயுதப் படை ஆண் காவலர் ஒருவர் மீனாவிற்கு உதவ முன் வந்து அவரும் அவற்றை அகற்றியதுடன் மதுரை மாநகராட்சி ஆணையருக்கு அறிவித்துள்ளார்.
மாநகராட்சி ஆணையரின் அறிவுரைப்படி உடனடியாக குறித்த பகுதி தண்ணீர் அடித்து சுத்தம் செய்யப் பட்டது. விபத்துகளை தடுக்க வீதியில் இறங்கி வலியை பொருட்படுத்தாமல் கழிவுகள் அகற்றிய பெண் தலைமை காவலருக்கு குறித்த பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்..!!