ரணிலும் – ராமநாயக்கவும் மஹிந்தானந்தவைக் கொல்லச் சதி செய்தனரா?
மஹிந்தானந்த அளுத்கமகேவை கொல்லச் சதிபோடுவது போன்று அமைந்துள்ள, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் நடத்திய தொலைபேசி உரையாடல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து மஹிந்தானந்த அளுத்கமகே சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். அத்துடன், நீதிமன்றத்தையும் நாடத் திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று நாடாளுமன்றில் கூறியவை வருமாறு-
ரஞ்சன் ராமநாயக்க என்னைக் கொலை செய்வதற்கான ஆசிர்வாதத்தை ரணிலிடமிருந்து பெற்றுக்கொண்டார். 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மாதிவெல குடியிருப்பில் தனது துப்பாக்கியில் ரஞ்சன் ராமநாயக்க பயிற்சிபெற்றிருந்தார்.
மஹிந்தானந்த மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டபின்னர் ரஞ்சன் ராமநாயக்கவின் துப்பாக்கிப் பயிற்சியில் ஏற்பட்ட விபத்தாக அதனைக் கூறுமாறு ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை கூறியதும் அந்தக் குரல் பதிவில் உள்ளது. அதேபோல, பொலிஸ்மா அதிபரும் தன்னைக் காப்பாற்றினார் என ரஞ்சன் கூறுகின்றார்.
மத்திய வங்கி மோசடி பற்றி மக்கள் பிரதிநிதியாக பிழைகளை சபையில் சுட்டிக்காட்டினோம். அதற்காக முன்னாள் பிரதமர் ரணில், உறுப்பினர்களைக் கொலை செய்ய அனுமதி வழங்குவதன் ஊடாக நாட்டில் என்ன நடக்கிறது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இது மிகவும் பாரதூரமான சம்பவமாகும். நாட்டின் பிரதமர் ஒருவர் இவ்வாறு நடந்துகொள்ள முடியுமா? இதுவா ஜனநாயகம்? என சபாநாயகரிடம் கேட்க விரும்புகின்றேன். ரஞ்சன் ராமநாயக்கவின் ஒரு இலட்சதுக்கும் மேற்பட்ட குரல் பதிவுகள் தற்போது அம்பலமாகி வருகின்றன. நீதிபதிகள், பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு உள்ளிட்ட பலருடனும் பேச்சு நடத்தப்பட்ட பதிவுகளும் உள்ளன.
இதற்கு ஒட்டுமொத்த முன்னாள் அமைச்சரவையும் பொறுப்புக்கூற வேண்டும். அலரி மாளிகையிலிருந்தே இந்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே, நாளைய தினம் பொலிஸாரிடமும், நீதிமன்றத்தையும் நாட நான் உத்தேசித்துள்ளேன். சபாநாயகர் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கும்படியும் கோருகின்றேன்” என்றார்.