வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான தேவை அதிகரித்திருப்பதால் அடுத்த ஆண்டு கூடுதலான வீடுகள் கட்டப்படும்..!
சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான தேவை அதிகரித்திருப்பதால்எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு கூடுதலான வீடுகள் கட்டப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறுகிறது. எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு 16,000 முதல் 17,000 வரையிலான தேவைக்கேற்பக் கட்டப்படும் வீடுகள் விற்பனைக்கு வரும் என அவர் கூறியுள்ளார். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 14,600.
சிங்கப்பூரர்கள் அனைவருக்கும், கட்டுப்படியாகக் கூடிய விலையில் நல்ல வீடுகளைக் கட்டுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் முடுக்கிவிட்டுள்ளதாகத் திரு. வோங் கூறினார். அமைச்சின் வலைத்தளப் பதிவில் அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் இளம் தம்பதியர் முதல் முறை வீடு வாங்குவதை எளிதாக்க உதவும் 2 முக்கியக் கொள்கை மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றின் மூலம், கழக வீடுகளுக்கான வருமான வரம்பு அதிகரிக்கப்பட்டது; மேம்படுத்தப்பட்ட மத்திய சேம நிதி வீட்டு மானியமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இளம் தம்பதியர் முதல் முறை வாங்கும் கழக வீட்டுக்கு 80,000 வெள்ளி வரையிலான மானியம் பெற அது வகைசெய்யும். கழக மறுவிற்பனை வீட்டை வாங்கினால் 160,000 வெள்ளி வரையிலான மானியத்துக்கு அவர்கள் தகுதிபெறுவர்.
மேலு அந்த மாற்றங்களால் கழக வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று அமைச்சர் வோங் தெரிவித்துள்ளார். கடந்த 5 வருடத்தில் சுமார் 150,000 குடும்பங்கள் முதல்முறை வீடு வாங்கியதை அவர் சுட்டினார். அவர்களில் பெரும்பாலோர் பொங்கோல், செங்காங், தெங்கா போன்ற முதிர்ச்சியடையாத பேட்டைகளில் வீடுகளை வாங்கினர்.