சிங்கப்பூரில் சற்று முன்னர் ஆரம்பமான சூரிய கிரகணம்..!!!
சிங்கப்பூரில் சற்று முன்னர் சூரிய கிரகணம் ஆரம்பமாகியுள்ளது. அதனை வாழ்நாளில் நடைபெறும் ஓர் அரிய நிகழ்வு என்று விண்வெளி ஆய்வாளர்கள் வருணித்துள்ளார். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு நேர்கோட்டில் வருவதால் சூரிய கிரகணம் ஏற்படும் போது சூரியன் நெருப்பு வளையம் போல் காட்சியளிக்கும். சிங்கப்பூரின் தெற்குப் பகுதியில் தான் அதனை முழுமையாகப் பார்க்கமுடியும்.
அந்த வகையில் கிரகணம் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வருடத்திற்கு ஒரு முறையோ, இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ தென்படும். ஆனால் சிங்கப்பூரில் அது அரிய நிகழ்வு என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் கூறியுள்ளது. சிங்கப்பூரில் மீண்டும் அத்தகைய சூரிய கிரகணத்தை 2063 ஆம் ஆண்டில்தான் காணமுடியும். சூரிய கிரகணம், காலை 11:27 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் சுமார் 1:23 மணிக்கு முழுமையடையும். அப்போது சூரியன், 94 விழுக்காடு மறைந்திருக்கும். அதனால், மாலை நேரத்தைப் போல் சற்று இருட்டாக இருக்கும்.
அதையடுத்து சந்திரன் விலகத் தொடங்கி, பிற்பகல் சுமார் 3:18க்குக் கிரகணம் முடிவுறும். கிரகணத்தை முறையான கருவிகளின் துணையுடன் தான் காணவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மரினா அணைக்கட்டு, தேசியத் தொடக்கக் கல்லூரி, சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக் கழகம், ஜூரோங் லேக் பூங்கா உட்பட பகுதிகளில் மக்கள் கிரகணத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.