சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் இருவர் பலி..!!
இன்றைய தினம் காலை சிங்கப்பூரில் கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளனர். சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் நடந்த முதல் மரணச் சம்பவங்கள் அவை. சுகாதார அமைச்சு அந்தத் தகவலை அறிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த 75 வயதுடைய பெண். மற்றவர் 64 வயதுடைய இந்தோனேசிய நபர் ஆகும். 75 வயதுடைய சிங்கப்பூரர் கடந்த மாதம் 23 ஆம் திகதி, நிமோனியா சிகிச்சைக்காகத் தேசியத் தொற்று நோய்த் தடுப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
அதே நாளில் அவருக்கு கொடிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்துக் கவனிக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது. சுமார் 26 நாள்கள் வழங்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அந்தப் பெண் இன்று காலை சுமார் எட்டு மணிக்கு உயிரிழந்துள்ளார். உயர் இரத்த அழுத்தம், இதயக் கோளாறு ஆகியவற்றால் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த இந்தோனேசிய நபர் , இம்மாதம் 13 ஆம் திகதி சிங்கப்பூருக்கு வந்தார். அன்றே தேசியத் தொற்று நோய்த் தடுப்பு நிலையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். மறுநாள் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றிப் போனதால், இன்று காலை சுமார் பத்தே கால் மணிக்கு அவர் உயிரிழந்தார். சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னர், அவர் இந்தோனேசியாவில் நிமோனியா காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு ஏற்கெனவே இதயப் பிரச்சினைகள் இருந்தன. இந்த இருவரின் உயிரிழப்பு தொடர்பாக ஆழ்ந்த வருத்தம் அடைவதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறினார். அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை அவர் தெரிவித்துக்கொண்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சு வழங்கும் என்றார் திரு. கான். தெரிவித்துள்ளார்.