கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த இருவரின் குடும்பத்தாருக்குப் பிரதமர் லீ ஆழ்ந்த அனுதாபம்..!!
சிங்கப்பூரில் கொடிய நோயான கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்த இருவரின் குடும்பத்தாருக்குப் அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொண்டார். சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் வேளையில், மேலும் அதிகமான நோயாளிகளுக்கு அவசரச் சிகிச்சைப் பிரிவின் பராமரிப்பு தேவைப்படலாம்; சிங்கப்பூரில் மேலும் அதிகமான இழப்புகள் நேரலாம்; சிங்கப்பூரர்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் லீ தெரிவித்தார். நோயாளிகளைக் கவனித்துக்கொள்ள, சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள் தங்களால் இயன்றளவு அயராது உழைத்து வருகின்றனர்.
இதுவரை, பாதிக்கப்பட்டுள்ள 385 பேரில் 131 பேர் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் சிகிச்சை பெற்றுவருவோரின் உடல்நலம் மேம்பட்டு வருகிறது. இருப்பினும், கொரோனா வைஸ் தொற்றைக் கையாள அனைவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றவேண்டும் என்று பிரதமர் லீ கேட்டுக்கொண்டார். நம்மையும், நமது குடும்பங்களையும், சிங்கப்பூரையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள நாம் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.