சிங்கப்பூரில் இறுதிச் சடங்கில் 250 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்!
சிங்கப்பூரில் நடைபெறும் இறுதிச் சடங்கு நிகழ்வுகளிலும், சமூகப் பாதுகாப்பு இடைவெளி விதி பின்பற்றப்பட வேண்டும் என்று தேசியச் சுற்றுப்புற அமைப்பு அறிவித்துள்ளது. ஒரே நேரத்தில் 250க்கும் குறைவானவர்களே இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என்று அமைப்பு அறிவித்துள்ளது. ஈமச்சடங்குகளை நடத்துவோரிடம் அது குறித்த விவரங்களை அமைப்பு வழங்கியுள்ளது.
உடல் வெப்ப நிலையைப் பரிசோதித்ததல், வருகையாளர்களின் விவரங்களைச் சேகரித்தல், பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய நடைமுறைகள் அவற்றுள் அடங்கும். நிகழ்வுகளில் கலந்துகொள்வோருக்கு இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். மேசைகளுக்கு இடையே போதிய இடைவெளி இருப்பது, ஒரு மேசையில் நாற்காலிகளின் எண்ணிக்கையைக் குறைத்தல் ஆகிய நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும். விருப்ப உணவு வகைகளைத் தெரிவு செய்யும் Buffet முறைக்கு மாற்றாக, தனியே உணவு வழங்கும் முறையைப் பரிசீலிக்குமாறு அமைப்பு அறிவுறுத்தியது. மண்டாய் தகனச்சாலையில் உள்ள அரங்குகளில் 50க்கும் குறைவானவர்களே கலந்துகொள்ள முடியும் என்றும் அமைப்பு தெரிவித்தது.