பாதுகாப்பான இடைவெளியை உறுதி செய்யத் தவறிய நிறுவனங்கள் மீது மனிதவள அமைச்சு நடவடிக்கை…!!
சிங்கப்பூரில் பாதுகாப்பான இடைவெளியை உறுதி செய்யத் தவறிய நிறுவனங்கள் மீது மனிதவள அமைச்சு நடவடிக்கை முன்னெடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அலுவலகங்கள், கடைகள், உணவகங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் பின்பற்றப்படவேண்டிய பாதுகாப்பு இடைவெளி வழிகாட்டிகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஊழியர்கள் அதிகம் கூடும் இடங்களான தொழிற்சாலைகள், கட்டுமான இடங்கள், கப்பல் கட்டும் தளங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் நாளில் 13 வேலை நிறுத்த உத்தரவுகளையும் 8 நினைவூட்டல் உத்தரவுகளையும் அமைச்சு பிறப்பித்தது. வேலையிடங்களில் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்காத நிறுவனங்களுக்கு அந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
சில நிறுவனங்கள் பாதுகாப்பான இடைவெளி நடவடிக்கைகளைப் பின்பற்றி கூடுதல் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருவதை அமைச்சு சுட்டியது. ஊழியர்களின் உடல்வெப்ப நிலையைப் பரிசோதிப்பது போன்ற நடவடிக்கைகளை அவை மேற்கொள்கின்றன. வேலையிடங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படும். பாதுகாப்பான இடைவெளியை உறுதி செய்யாத வேலையிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனிதவள அமைச்சு எச்சரித்தது.