அனைத்து நாடுகளிலும் அடுத்த இரண்டு வருடத்திற்கு பெண்கள் தலைமை தாங்கினால் எல்லாவற்றிலும் அதிக மேம்பாடு – திரு. ஒபாமா
அனைத்து நாடுகளிலும் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்குப் பெண்கள் தலைமை தாங்கினால் எல்லாவற்றிலும் அதிக மேம்பாடு தெரியும் என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார். சிங்கப்பூரில் நடந்த பொதுமக்கள் கருத்தரங்கில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார். பெண்கள் ஆட்சியில் போர் ஏற்படும் சாத்தியம் குறையும், பிள்ளைகளின் நலனும் பொதுவான வாழ்க்கைத் தரமும் மேம்படும் என்று திரு. ஒபாமாதெரிவித்தார்.
முக்கிய முடிவுகளை எடுப்பதில் பலவகைக் கண்ணோட்டங்கள் இருப்பதற்குத் தலைமைப் பொறுப்புகளில் வேற்றுமை அவசியம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். பெண்கள், சிறுபான்மையைச் சேர்ந்தோர், வெவ்வேறு சமூக, பொருளியல் நிலைகளைச் சேர்ந்தோர் ஆகியோரின் பங்கு அரசாங்கங்களுக்கு அவசியம் என்று திரு. ஒபாமா கூறினார். தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் வயதான ஆண்கள் மற்றவர்களுக்கு வழிவிடாமல் இருப்பது உலகில் நிலவும் பிரச்சினைகளுக்குக் காரணம் என அவர் கூறியுள்ளார். அவர்கள் தலைமைப் பொறுப்பில் நீண்ட காலம் இருப்பதால் புதுவகையான் செயல்முறைகளும் கண்ணோட்டங்களும் பாதிக்கப்படுகிறதாக அவர் கூறியுள்ளார்.