சிங்கப்பூரில், ஏப்ரல் மாதத்தின் போது நடைபெறவிருந்த தமிழ்மொழி விழா கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைப்பு..!!
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதியில் இருந்து மே மாதம் 3ஆம் திகதி வரை தமிழ்மொழி விழா இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக விழாவைத் தள்ளி வைப்பதாக வளர்தமிழ் இயக்கம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வுகளை ஒத்தி வைப்பது அத்தனை சுலபமான முடிவாக இருக்கவில்லை என்று இயக்கம் குறிப்பிட்டது. எனினும், மாணவர்கள், அவர்களின் குடும்பத்தினர், பங்காளி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் நலன் கருதி சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கு ஏற்ப அந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
10 வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த விழாவில் 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அவற்றுள் ஒன்று தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் திருக்குறள் போட்டிகள். கடந்த 36 வருடங்களாக இடம்பெறும் இந்தப் போட்டி இவ்வாறு பின்னொரு நாளுக்குத் தள்ளி வைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும். ஆறு வாரங்களிலிருந்து எட்டு வாரங்களுக்குத் திருக்குறள் போட்டிகள் நடைபெறுவதால் இணையம் வழியாகவோ மின்னஞ்சல் மூலமோ அதை நடத்த முடியாது என்று கழகத்தின் தலைவர் திரு. ஹரிகிருஷ்ணன் முத்துசாமி கூறினார். நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வரும் வளர்தமிழ் இயக்கம், இதர அமைப்புகளுடனும் சமூகப் பங்காளிகளுடனும் தொடர்ந்து செயல்படப் போவதாகக் குறிப்பிட்டது.