சிங்கப்பூரில் ஆயுதங்களுடன் கைகலப்பில் ஈடுபட்ட 13 பேர் மீது குற்றச்சாட்டு..!!
இன்றைய தினம் நீதிமன்றத்தில் சிங்கப்பூரில் சுவா சூ காங் வட்டாரத்தில், ஆயுதங்களுடன் காணப்பட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டபட்டுள்ளது. இவ்வாறு கைகலப்பில் ஈடுபட்ட குறித்த 13 பேரும் ‘knuckle duster’ எனும் ஆயுதம் உட்பட கத்தி, இரும்புத் தடி ஆகியவற்றை வைத்திருந்ததாக கூறப்படுகின்றது. 17 வயதில் இருந்து 28 வயதுக்கு உட்பட்ட அந்த நபர்கள், 28 மணி நேரத்திற்குள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வு பிரிவும் ஜூரோங் பொலிஸ் பிரிவும் தெரிவித்துள்ளது.
ஜாலான் புக்கிட் மேரா, வெஸ்ட் கோஸ்ட் ரோடு, யீஷன், புக்கிட் பாத்தோக், லோவர் கெடன்ட் ரிட்ஜ் ரோடு ஆகிய பகுதிகளிலிருந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோரை ஒருபோதும் பொருத்துக்கொள்ளாது என்று பொலிஸார் அவ்வாறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. கைது செய்யப்பட்ட ஐவர், ஆயுதம் ஏந்தி வன்முறையில் ஈடுபட்ட குற்றத்தை எதிர்நோக்குவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 வருடம் வரை சிறை தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படக்கூடும். இதர எட்டு பேர், ஆயுதங்களுடன் சட்டத்திற்கு புறம்பாக ஒன்றுகூடிய குற்றத்தை எதிர்நோக்குவர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 வருட சிறை, அபராதம், பிரம்படி ஆகிய தண்டனைகள் விதிக்கப்படக்கூடும்.