வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் புளோக்குகளின் மின்தூக்கி பொத்தான்கள்மீதும் கண்ணாடிகள்மீதும் எச்சில் துப்பியதாக இரு இளையர்கள் மீது விசாரணை..!!
சிங்கப்பூரில் பொதுத் தொல்லைக் குற்றத்தை எதிர்நோக்கும் இரண்டு இளையர்களை பொலிஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் புளோக்குகளின் மின்தூக்கி பொத்தான்கள்மீதும் கண்ணாடிகள்மீதும் எச்சில் துப்பியதாக சந்தேகத்தின் பேரில் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.அந்த இரு இளையர்களும் அங் மோ கியோ, பொங்கோல் ஆகிய வட்டாரங்களில் உள்ள புளோக்குகளில் அத்தகைய செயலைப் புரிந்ததாக கூறப்படுகிறது.
அவர்களில் ஒருவருக்கு 12 வயது. மற்றவருக்கு 17 வயதாக்கும். கடந்த வாரம் பொங்கோல் வாக் புளோக்கின் மின்தூக்கியில் எச்சில் இருந்ததாக புகார் செய்யப்பட்டது. பின்னர் செவ்வாய்க்கிழமை (25 பிப்ரவரி) அங் மோ கியோ ஸ்டிரீட் 32 இன் புளோக் ஒன்றின் மின்தூக்கியிலும் எச்சில் காணப்பட்டது. அக்கம் பக்கத்தினரிடம் மேற்கொண்ட விசாரணை, கண்காணிப்புக் கேமராவில் பதிவான காணொளி ஆகியவற்றின் மூலம் இளையர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்கும் வேளையில் அத்தகைய சம்பவங்கள் பிறருக்கும் பதற்றை எற்படுத்துவதுடன் இடையூறாக இருக்கின்றன என்று பொலிஸார் தெரிவித்தது. பொறுப்பற்ற அந்தச் செயல்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளது. சமூக பொறுப்புடனும் நல்ல சுகாதாரத்துடனும் நடந்துகொள்வதில் அனைவருக்கும் பங்கு உண்டு என்று பொலிஸார் தெரிவித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2,000 வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படலாம். செயலால் மற்றவர்களுக்குப் பாதிப்பு நேர்ந்தால் அதிகபட்சமாக 2,000 வெள்ளி அபராதத்துடன் மூன்று மாதச் சிறைத்தண்டனை விதிக்கபடலாம்.