ஸ்ரீலங்காவில் சட்டத்தை மீறுவோரை காணும் இடத்தில் சுட உத்தரவு? – முஸ்லிம் பகுதிகளில் கலவரம், உடமைகள் சேதம்!!
ஸ்ரீலங்காவில் நேற்றைய தினம் இளைஞர் ஒருவரின் முகநூல் நிலைத் தகவலைத் தொடர்ந்து ஆரம்பித்த வன்முறைகள், இன்றைய தினம் பெருமளவில் ஏனைய இடங்களிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. முஸ்லிம் மக்கள் வாழும் சில பகுதிகளில் இன்றைய தினம் சிங்கள காடையர்களினால் கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
குருநாகல் ஹெட்டிப்பொல அனுக்கான பகுதியில் , முஸ்லிம்களின் வீடுகளுக்குத் தீவைக்கப்பட்டுள்ளதோடு, அம் மக்களின் உடமைகள், மற்றும், தொழில் நிறுவனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், அப் பகுதி மக்கள் வயல்களில் தஞ்சமடைந்திருப்பதாக அறிய முடிகின்றது. இதே வேளை கொட்டம்பிட்டிய அரபுக் கல்லூரிக்கும் தீவைக்கப்பட்டுள்ளதாக கல்லூரிப் பேச்சாளர் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
தற்சமயம் ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினைக் கருத்திற் கொண்டு, நாடளாவிய ரீதியில் தற்பொழுது முதல், நாளை அதிகாலை காலை 04 மணி வரைக்கும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. வடமேல்மாகாணம் – குருணாகல், மற்றும் கம்பஹா மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை இவ் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று ஸ்ரீலங்காப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.
அத்துடன், நிலமையினைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாவிடின் இராணுவத்தரப்பு தமது முழுப் பலத்தினையும் பிரயோகிக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.