ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி..!!
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக டெல்லி சென்று விட்டு சொந்த ஊர் திரும்பிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் மணிப்பூரை சேர்ந்த 41 வயதுடைய முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் என்பவர் கடந்த 1998 ஆம் ஆண்டு பாங்காக்கில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள டிங்கோ சிங் கதிரியக்க சிகிச்சைக்காக டெல்லிக்கு பயணம் செய்ய இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் தேசியளவிலான ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக அவரால் சிகிச்சை மேற்கொள்ள இயலாமல் தாமதமானது. அவரின் நிலையை அறிந்த இந்திய குத்துச்சண்டை கழகம், விளையாடுத்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜூ, மணிப்பூர் அரசின் முயற்சியால் விமானம் மூலம் சிகிச்சைக்காக டெல்லி அனுப்பி வைத்துள்ளனர்.
அவரின் சிகிச்சை முடிந்து சாலை மார்க்கமாக 2,400 கிமீ பயணம் செய்து மணிப்பூருக்கு திரும்பிய குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்கிற்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக குடும்ப வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.