டி-20 போட்டியை நடத்த இலங்கைக்கு பச்சை கொடி காட்டிய ஆசிய கிரிக்கெட் கவுன்சில்!
டி-20 உலக கிண்ணப் போட்டியை நடத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இலங்கைக்கு பச்சை கொடிகாட்டியுள்ளது என்று இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தவிருந்தது, ஆனால் கொடிய கொரோனா வைரஸ் தொற்று நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாததால், அவர்கள் இந்த நிகழ்வை நடத்துவதில் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.
நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் ஆணையத்துடன் கலந்துரையாடினோம், தற்போதைய உலக நிலைமை காரணமாக 2020 ஆசிய கோப்பை டி-20 போட்டியை இலங்கை நடத்துவதற்கு அவர்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளனர். இன்றைய தினம் (ஜூன் 8) நாங்கள் ஒரு ஆன்லைன் ஏ.சி.சி கூட்டத்தை நடத்தினோம், அவர்கள் போட்டியை நடத்த எங்களுக்கு பச்சை கொடி காட்டியுள்ளனர் என்று சில்வா கூறினார்.
குறித்த நிகழ்வை நடத்துவது தொடர்பாக இப்போது இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாட வேண்டும், மேலும் கொரோனா நெறிமுறைகளுக்கு இணங்க, போட்டியை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் ஒத்துழைப்புடன் சரியான திட்டத்தை வகுக்க வேண்டும் என தெரிவித்தார். குறித்த போட்டியில் முன்னாள் சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் மற்ற ஆசிய நாடுகளில் விளையாடும் தகுதி போட்டியில் வெற்றிப்பெறும் அணி என மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன.