இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் திறக்க தீர்மானம்..!!
கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை தொடர்ந்து மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை விரிவுபடுத்துவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார். உயிரைக் குடிக்கும் கொரோனா வைரஸ் நாட்டிற்குள் பரவுவதை தடுக்க பல மாற்று நடவடிக்கைகளில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றதாக அவர் கூறினார்.
வருடம் தோறும் 10 முதல் 12 மில்லியன் பயண நடவடிக்கைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இடம்பெறுகின்றன, இன்னும் 2 வருடங்களில் இந்த எண்ணிக்கை 18 முதல் 20 மில்லியன் வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் தடைப்பட்டுள்ளன, இதனால் உலகிலுள்ள அனைத்து விமான நிலைய சேவைகளும் சரிவடைந்துள்ளதாக கூறிய அவர், சுகாதாரத் தரப்பு ஆலோசனையுடன் ஏனைய விமான நிலையங்களையும் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.