ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்று முதல் வழங்கப்பட்டுள்ள அனுமதி!
ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த இன்று முதல் அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுமார் மூன்று மாத காலமாக ஹோட்டல்களில் திருமணங்கள் நடைபெறாமல் இருந்தன.
ஹோட்டல்களில் மூன்றில் ஒரு பங்குடையவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்குள் 1.5 மீற்றர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். அதேநேரம் சுற்றுலாவை மீண்டும் தொடங்குவது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் அமைச்சிற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என செயலாளர் சிறிபால மேலும் கூறினார்.