பெண் ஒருவரின் வயிற்றிலிருந்து 19.5 கிலோ கிராம் நிறையுள்ள கட்டி ஒன்றை வெட்டி அகற்றி சாதனை படைத்த வைத்திய நிபுணர்கள்…!!!
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மேற்கொண்ட சத்திர சிகிச்சையில் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 19.5 கிலோ கிராம் நிறையுள்ள கட்டி ஒன்றினை வெட்டி அகற்றி வெற்றிகரமாக முடித்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எம்.ஜவாஹிர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சையை நடத்தியதாகவும், இது சுமார் 2 மணித்தியாலம் நடைபெற்றதன் பின்னர் அந்தக்கட்டியை அகற்றியதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் வயிற்றில் இருந்த 19.5 கிலோ கிராம் நிறையையும் சுமார் 48 சென்ரி மீற்றர் நீளத்தையும் 34சென்ரி மீற்றர் அகலத்தையும் 23 சென்ரி மீற்றர் உயரத்தையும் உடைய பெரும் கட்டி ஒன்றை வெட்டி அகற்றிய சாதனையை அக்கரைப்பற்று வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களினால் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சத்திர சிகிச்சையை செய்துள்ள சத்திர சிகிச்சை நிபுணர்களான எஸ்.எஸ்.ஜமீல், பீ.கே.இரவீன்திரன், மகப்பேற்று மற்றும் பெண்ணோயியல் வைத்திய நிபுணர் யுரேக்கா விக்ரமசிங்க, மயக்க மருந்து வைத்திய நிபுணர் றுவான் குருப்பு, மயக்க மருந்து மற்றும் சத்திரசிகிச்சை சிரேஷ்ட வைத்தியர்கள், சத்திர சிகிச்சை கூட தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார உதவியளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஆகியோர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளர்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்காக பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்துள்ளதுடன் வைத்தியசாலையின் புறச்சூழல் அழகுபடுத்தப்பட்டு சுற்றாடல் நேய செயற்றிடங்களும் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தாய் சேய் நலனிற்காக விசேட விடுதி ஒன்றும் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கூறியுள்ளார்.