ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம்…!!!
கொழும்பின் கட்டுநாயக்க பகுதியில் வைத்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று பரபரப்பு தகவலை இன்றைய தினம் வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க பகுதியில் வைத்து அதிபர் கோத்தபாய ராஜபக்ச படுகொலை செய்ய முயற்சித்தார்கள் எனத் கூறி வன்னி மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவர் உட்பட 05 பேர் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அல்லது அவரின் குடும்பத்தில் யாராவது கொலை செய்யப்பட்டால் பாரிய பணத்தொகையுடன் வெளிநாடுகளில் நிரந்தர வசிப்பிடத்தை பெற்றுக்கொள்ளவும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியை கொலை செய்ய வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த முகமது றிப்கான், கிளிநொச்சி அக்கராயன்குளத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் மதன், விசுவமடு தர்மபுரத்தைச் சேர்ந்த வேலு கோணேஸ்வரம்,விசுவமடு கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த குணரத்னம் நகுலேஸ்வரன், மற்றும் மஸ்கெலியாவைச் சேர்ந்த ஆரியராஜன் கமலராஜா என்பவரே திட்டமிட்டுள்ளதாக கூறி அவர்கள் அனைவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதுவ ஜயவர்தனபுர அமந்தோலுவ பிரதேசத்தில் ஒரு வீட்டில் இவர்கள் தற்காலிகமாக தங்கியிருந்ததாகவும் அந்த தகவல் கூறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மதன் எனும் சந்தேகநபருடைய சகோதரிகள் இருவர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் எனவும் அவர்களில் ஒருவருக்கு இதுவரை புனர்வாழ்வு அளிக்கப்படவில்லை என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் ஊடகம் கூறியுள்ளது.
கடந்த 28 ஆம் திகதி இந்த சந்தேக நபர்கள் 05 பேரும் ஒன்றிணைந்து மதுபானம் அருந்தி இந்த சூழ்ச்சியை செய்துள்ளதாகவும், அதில் பிரதான சூத்திரதாரியாக றிப்கான் என்பவர் இனம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நபர் வெளிநாடுகளில் வேலை செய்தவர் என்றும் , அவருக்கு ஹிந்தி மற்றும் பிறமொழிகளில் பரிச்சயமானவர் எனவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இந்த நபர், முன்னாள் முஸ்லிம் அமைச்சர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் இது போன்ற நிலையில், அவர் சிக்கிக்கொண்டால் இந்த அமைச்சரின் செல்வாக்கின் மூலம் வெளிவர முடியும் எனவும் கைதான நபர் விசாரணையில் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது