சுவிஸ்லாந்து தூதரக பெண் பணியாளர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டதற்கு எந்தவொரு ஆதாரம் இல்லை – சிஐடி
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரக பெண் பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கு எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவிடம், குற்ற விசாரணைப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் கொழும்பு பிரதம நீதிவானிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். சென்.பிரிஜெட் கொன்வென்ட் அருகிலேயே இந்தக் கடத்தல் நடந்ததாக சுவிஸ் தூதரக அதிகாரிகளிடம் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் தெரிவித்திருந்தால், அவர் குற்ற விசாரணைப் பிரிவில் கொடுத்த வாக்கு மூலத்திலிருந்து அத்தகைய சம்பவம் எதுவும், அந்த இடத்தில் நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் குற்ற விசாரணைத் திணைக்களத்தில் அவர் கொடுத்த வாக்கு மூலத்தில், கொள்ளுப்பிட்டி பல்மேரா கோர்ட் அடுக்குமாடி அருகிலேயே சம்பவம் நடைபெற்றதாக கூறியுள்ளார். குற்ற விசாரணைத் திணைக்களம் இதுவரை நடத்திய விசாரணையின் போது, அவர் கூறியபடி இலக்கம் 20,2 / 2, பல்மேரா கோர்ட், பல்மேரா அவென்யூ, கொழும்பு- 03 இல், எந்தவொரு சம்பவமும் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அவரிடம் மேலும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும். ஏனெனில் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.
கடந்த 8 ஆம் திகதி அவரது முழு வாக்குமூலத்தையும் பதிவு செய்ய முடியவில்லை. அவர் தனது வாக்குமூலம் வழங்கப்படும் போது இரண்டு முறை மயக்கம் அடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. அவரது வாக்குமூலம் இன்னமும் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. அவர் வாக்குமூலம் வழங்கும் போது, தூதரக மருத்துவர் மற்றும் தூதரக அதிகாரிகள் அவருக்கு மிக அருகில் இருந்தனர். அதைத் தொடர்ந்து அவரது தொலைபேசி விபரத்தில் இருந்த இரண்டு பேரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டும். அவர்களில் ஒருவர் தூதரக அதிகாரி” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.