உள்ளூர் பரீட்சைகளின் போது நிரலாக்கப்படாத கணிப்புப்பொறிகளை பயன்படுத்த அனுமதி..!!
எதிர்வரும் காலங்களில் உள்ளூர் பரீட்சைகளின் போது நிரலாக்கப்படாத கணிப்புப்பொறிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இது அறிமுகம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இலங்கை கணக்கியல் சேவை தரம் மூன்று பரீட்சையின் நிதிக்கணக்கியல் ஒன்று வினாத்தாள் மற்றும் இரண்டு வினாத்தாள் போன்றவற்றுக்கே கணிப்புப்பொறிகளை பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை உத்தியோகபூர்வமாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். அதற்கு அமைய 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி 16, 22 மற்றும் 23ம் திகதிகளில் இடம்பெறவுள்ள பரீட்சைகளில் இந்த நடைமுறை செயற்பட்டிற்கு வருவதாக அவர் அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இந்த பரீட்சைகளின் போது தொடர்புக்கொள்ளக்கூடிய இலத்திரனியல் கருவிகளுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதற்கு இடையில் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை இணையத்தின்(On-line) ஊடாக கோரவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.