அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கும் வரை, அமெரிக்காவுக்கு செல்ல விசாவை விண்ணப்பிக்க வேண்டாம் – எஸ்.எம். மரிக்கார்
ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு விசா வழங்க அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள தடையை நீக்கும் வரை, அமெரிக்காவுக்கு செல்ல விசாவை விண்ணப்பிக்க வேண்டாம் என தேசப்பற்றுள்ள சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது இறையாண்மையுள்ள அரசான இலங்கையின் இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடை என கருத வேண்டும். இந்த தடையை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கும் வரை நான் எந்த சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவுக்கு செல்ல விசா கோரி விண்ணப்பிக்க மாட்டேன். சகல இலங்கையரும் இதனை செய்ய வேண்டும். குறிப்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினரிடம் இந்த கோரிக்கையை விடுக்கின்றேன் என மரிக்கார் தெரிவித்துள்ளார்.