தொடங்கியது அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் மோதல்..!
இலங்கையின் சமகால அதிபர் கோத்தபாய ராஜபக்சவுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கண்டியில் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியிருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் தொலைபேசி உரையாடல் குரல் பதிவு பகிரப்பட்டு வருகிறது. இலங்கை அதிபர் சமூக வலைத்தள ஊடகப் பிரிவில் பணியாற்றும் உதயங்க என்பவர், பிரதமர் மகிந்த ராஜபக்சவை உயர்வாக காட்டும் போஸ்ட் ஒன்றை பதிவேற்றம் செய்திருந்ததை, ஜனாதிபதியின் சமூக வலைத்தள ஊடகப் பிரிவின் பிரதானியான ஷர்மிளா ராஜபக்ச விமர்சிப்பது இந்த குரல் பதிவில் உள்ளடங்கியுள்ளது.
உதயங்க என்பவர், ஜனாதிபதியின் பேஸ்புக் வலைத்தள பக்கத்தில் மகிந்த ராஜபக்சவின் தொடர்பான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளதுடன் அதில் சமப்படுத்த முடியாத சிறப்புதன்மை என குறிப்பிட்டுள்ளார். இதனை விமர்சிக்கும் ஷர்மிளா ராஜபக்ச, இவ்வாறான பதிவுகளை பதிவேற்றினால், மகிந்த ராஜபக்சவிடம் தான் வேலை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் வேலை செய்ய முடியாது என தெரிவிக்கிறார்.
இது குரல் பதிவு தொடர்பாக பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பதிவேற்றிய சமூக வலைத்தள செயற்பாட்டாளர் ஒருவர்,“ஜனாதிபதிக்கும் அண்ணன் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் மோதல் என்று கூறினால், சேறுபூச வேண்டாம் என கூறுவார்கள். அப்படியானவர்கள் நன்றாக காதை கொடுத்து இந்த பதிவை கேளுங்கள்” எனக் கூறியுள்ளார்.