சிரியாவில் தொடரும் பிரச்சினைக்கு உதவி புரியுமாறு, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு துருக்கி ஜனாதிபதி அழைப்பு விடுப்பு.!
சிரியாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளை முடிவுக்குக் கொண்டு வர உதவி செய்யுமாறு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு துருக்கி ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.உள்நாட்டு போர் நடைபெற்று சிரியாவில் நிலைக் கொண்டுள்ள துருக்கி படையினர் கடும் சவாலை எதிர்கொண்டு வருகின்றனர். இது போன்ற நிலையிலேயே அவர் இவ்வாறு உதவி கோரியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர் கூறுகையில், ‘இட்லிப் பகுதியில் சிரிய மாற்று ரஷ்யா கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து வருகின்றனர்.
அங்கு நடைபெறும் மனிதாபிமான நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவர பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் உதவ வேண்டும்’ என தெரிவித்துள்ளார். சிரியாவில் ஜனாதிபதி ஆசாத்துக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு வருடங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அதில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டுவிட்டன. சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள் ரஷ்யாவின் உதவியுடன் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
சிரியாவின் அரசுப் படைகள் ரஷ்யப் படை உதவியுடன் இட்லிப் பகுதியிலிருந்த கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பகுதியைக் கைப்பற்றின. இதன் காரணமாக தற்போது சிரிய படைக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது. அப்பகுதியில் தங்கள் கண்காணிப்பு நிலைகளை அமைத்துள்ள துருக்கிக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து சிரியாவிலிருந்து அகதிகள் துருக்கிக்கு வருவது அதிகரிக்கும் என்ற கவலை துருக்கிக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, சிரியாவிலுள்ள கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி தனது ஆதரவை கொடுத்து வருகிறது. மேலும் ரஷ்யாவுடனான பேச்சு வார்த்தைக்கு அழுத்தம் அளித்து வருகிறது. இந்த நிலையில் சிரிய அரசுப் படைகள் மீது துருக்கி நடத்தும் தாக்குதலுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.