ஈரானிய கப்பல்கள் குவைத்திற்குள் நுழைய தற்காலிக தடை விதிப்பு..!!
ஈரான் கப்பல்கள் குவைத்திற்குள் நுழைவதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் கோர தாண்டவமாடும் கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் மட்டும் 2,592 பேர் உயிரிழந்ததுடன் 77,150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஈரானில் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கொடிய கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தீர்மானமானது ஷூய்பா, தோஹா மற்றும் ஷுவைக் துறைமுகங்களை உள்ளடக்கியது என குவைத் துறைமுக ஆணையகம் தெரிவித்துள்ளது.
ஈரானில் கொரோனா வைரஸ் பரவால் இருப்பதற்காக முன்னெடுக்கப்படும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒரு பகுதி இது என குவைத் துறைமுக ஆணையகத்தின் தலைவர் ஷேக் யூசப் அப்துல்லா அல் சபா தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஈரானுக்கான அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைப்பதாக குவைத் ஏயர்வேஸ் கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.