வெளிநாடுகளில் கொரோனா வைரஸால் அடுத்தடுத்து பலியாகும் இலங்கைத் தமிழர்கள்..!
யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் வசித்து வந்த இரண்டு இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ள செய்தி வெளிவந்த நிலையில் தற்போது மற்றுமொரு உயிரிழப்பும் பதிவாகி உள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் வசித்து வந்த யாழ்ப்பாணம் – தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதுடைய நபர் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் பலியாகியுள்ளார்.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கையில்,
பிரான்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் கிடைத்திருந்ததாக வௌிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கூறினார். மேலும், சுவிட்சர்லாந்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டாலும், மரணத்திற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில், நேற்று இத்தாலியின் மெசினோ(miseno) நகரில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.