தத்துவ மேதை என போற்றப்பட்ட ரெனே டெஸ்கார்ட்ஸ் என்பவரின் பிறந்த தினம்..!
1596 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி பிரான்ஸில் ரெனே டெஸ்கார்ட்ஸ் பிறந்தார். இவர் மெய்யியல் அறிஞர், கணிதமேதை, தத்துவ மேதை என புகழ் பெற்று விளங்கினார். 1607ஆம் ஆண்டு இவர் லா-பிலெஞ்சிலுள்ள ஜேசூயிட் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு கணிதம், இயற்பியல் மற்றும் கலிலியோவின் கண்டுபிடிப்பு வேலைகள் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டது.
1614 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பின், 1615 ஆம் ஆண்டு தொடக்கம் 1616 ஆம் ஆண்டு வரை பொய்ட்டீர் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் இளங்கலை பட்டமும், பொதுச்சட்டவியல் தொழில் செய்ய உரிமமும் பெற்றார். அதனையடுத்து தனது தந்தையின் விருப்பப்படி வழக்கறிஞரானார்.
ஆனால், இவர் கணிதம், இயற்பியல், மெய்யியல், மருத்துவம், அரசியல் போன்ற துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் பின்னர்1626 ஆம் ஆண்டு ரூல்ஸ் ஃபார் த டைரக்ஷன் ஆஃப் தி மைண்ட் என்ற நூலை எழுதினார். ஒளியியல், வானியல், கணிதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கணிதத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளான கார்ட்டீசியன் ஆய்வுமுறை (Cartesian coordinate system), பகுப்பாய்வு வடிவியலை (Analytical Geometry) கண்டறிந்தார். நவீன தத்துவவியலின் தந்தை என்று புகழப்பட்ட ரெனே டெஸ்கார்ட்ஸ் 1650 ஆம் ஆண்டு மறைந்தார்.