கொரோனா தொற்று மருத்துவமனையாக மாறுகிறது அமெரிக்க ஓபன் ரென்னிஸ் வளாகம்..!!
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. சீனாவில் ஏற்பட்ட கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை விட அமெரிக்காவில் தான் அதிகமாக காணப்படுகின்றது. தற்போது வரை ஒரு லட்சத்து 66, 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 ஆயிரத்தை தாண்டியும் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கின்றது.
அதில் நியூயார்க்கில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பாதியாகும். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் இடம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமெரிக்க ஓபன் ரென்னிஸ் வளாகம் பகுதியிலுள்ள உள்விளைாட்டு அரங்கத்தை தற்காலிக 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்ற அமெரிக்க ரென்னிஸ் அசோசியேசன் சம்மதம் தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக அமெரிக்க ரென்னிஸ் அசோசியேசனின் செய்தி தொடர்பாளர் கிறிஸ் விட்மையர் “நியூயார்க் எங்கள் வீடு. நாங்கள் இங்கே உதவி செய்வதற்காக இருக்கிறோம். இதில் நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இருப்போம்’’என்று கூறியுள்ளார். நியூயார்க் நகர அவரசநிலை மேலாண்மை செய்தி தொடர்பாளர் ‘‘இந்த இடம் கொரோனா வைரஸ் தொற்று இல்லாதவர்களுக்காக பயன்படுத்தப்படலாம். ஆனால் தேவையைப் பொறுத்து மதிப்பீடு செய்வோம். ஐந்து நகரங்களில் மருத்துவமனைகளை அதிகரிப்பதற்கான இடத்தை கண்டறிந்துள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
அது மட்டும் இன்றி உலகின் பல பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களை வரவழைத்து தற்காலிக மருத்துவமனையாக மாற்ற அமெரிக்கா திட்டுமிட்டுள்ளது. பொது இடங்களான பூங்கா போன்றவற்றில் அவசர மருத்துவமனை தயார்படுத்த ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்