கொரோனா வைரஸ் பதற்ற நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, மாஸ்க் விற்ற நபர் ஒருவர் பிரான்சில் கைது…!!!
பிரான்சில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பதற்ற நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாஸ்க் விற்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவப் பணியாளர்களுக்கு மாஸ்க் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக, மார்ச் மாதம் முதல், நாட்டின் அனைத்து மாஸ்குகளும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே மாஸ்க் தயாரிப்பு, விற்பனை என அனைத்துமே அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், அதற்குப்பின்பு பொலிசார் பாரீஸில் பல பகுதிகளில் சட்ட விரோதமாக பதுக்கப்பட்ட பல ஆயிரம் மாஸ்குகளை கைப்பற்றியுள்ளனர். தென் பாரீஸிலுள்ள சுற்றுலா ஏஜன்சி ஒன்றில் 20,000 மாஸ்குகளும், இயற்கை உணவு கடை ஒன்றில் 15,000 மாஸ்குகளும் கைப்பற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், மேற்கு பாரீஸில் சிறிய ட்ரக் ஒன்றில் 23,000 மாஸ்குகள் மறைத்துவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கடந்த வாரம் பாரீஸில் சிக்கிய 20,000 மாஸ்குகள் தொடர்பாகத்தான் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனையும், 10,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.