ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசி முதற்கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றம்..!!
பிரித்தானியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தடுப்பூசி முதற்கட்ட சோதனையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த கட்டமாக குழந்தைகள், பெரியவர்கள் என 10260 பேருக்கு அவர்களின் நோய் தடுப்புத் திறனில் இந்த தடுப்பூசி எந்த அளவிற்கு செயல்படுகிறது என சோதித்துப் பார்க்கப்படவுள்ளது. அதன் ஆரம்பகட்ட முடிவுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் கிடைக்கும் என ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி பிரிவு தலைவர் ஆண்ட்ரூ பொல்லார்ட் (Andrew Pollard) தெரிவித்துள்ளார்.
அதையடுத்து 3 ஆம் கட்டமாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்த தடுப்பூசி எப்படி செயல்படுகிறது என்ற ஆய்வு நடத்தப்படும் என்றும் அதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு தடுப்பூசியால் கிடைக்கும் பலன்கள் குறித்து தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து கட்டங்களிலும் வெற்றிகரமான முடிவுகள் தெரிய வந்தவுடன், பிரபல மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஸெனகா (AstraZeneca) தடுப்பூசியை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்யும் எனவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.