நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் முறையாக 200 ஜெர்மனி தொழிலாளர்களுடன்சீனா வந்தடைந்த ஐரோப்பிய விமானம்..!!
சீனாவில் இயல்புநிலை திரும்பியுள்ளதை அடுத்து முதல் முறையாக 200 ஜெர்மனி தொழிலாளர்களுடன் ஐரோப்பிய விமானம் நீண்ட நாட்களுக்கு பிறகு சீனா சென்றடைந்துள்ளது.
2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் ஊகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய உயிர்க்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்று சீனா முழுவதும் வேகமாக பரவத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமல்படுத்திய சீன அரசாங்கம் நோய் தடுப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியது. சீனாவிலுள்ள வெளிநாட்டவர்களுக்கான விசா ரத்து செய்யப்பட்டது. இதனால் சீனாவில் இருந்த அனைத்து வெளிநாட்டவர்களும் சொந்த நாடு திரும்பினர். கடந்த ஜனவரி முதல் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவத்தொடங்கியது. இதனால் பிப்ரவரி மாதத்துக்கு பின்னர் சர்வதேச போக்குவரத்துக்கு தடை விதித்திருந்தன.
மேலும் இந்த நிலையில் வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனாவில் கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட விசா நடைமுறைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் சீனாவுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஜெர்மனியில் இருந்து லுஃப்தான்சா விமானம் 200 தொழிலாளர்களுடன் சீனாவுக்கு சென்றடைந்தது. நேற்றைய தினம் பிற்பகலில் தென் கிழக்கு சீனாவிலுள்ள தியான் ஜின் விமான நிலையத்தில் இந்த விமானம் வந்தடைந்தது. அதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்படும், எனவும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் இடையில் 2ஆவது விமானம் பிராங்போர்ட்டில் இருந்து சீனாவுக்கு எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி புறப்படும் எனவும் அதில் பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பதுறைகளை சார்ந்தவர்கள் பயணம் செய்ய மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் பயணிகளும் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் சீனா வர அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. மேலும் சீனா மற்றும் வெளிநாடுகளிடையேயான விமான சேவை 134 இருந்து 407 உயர்த்தப்படும் என சீன சிவில் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது