தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரை தீயில் இருந்து கைப்பற்றிய 5 வயது சிறுவன்..!!
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் பார்டவ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீட்டிலுள்ள ஒரு படுக்கையறையில் திடீரென தீப்பிடித்துள்ளது. குறித்த அறையில் தனது தங்கையுடன் தூங்கி கொண்டிருந்த 5 வயதுடைய நோவ் வூட்ஸ் என்ற சிறுவன் அறையில் தீப்பற்றி எரிவதை பார்த்து விட்டான். ஆனால் அவன் தீயை கண்டு அலறவோ அல்லது பதற்றமடையவோ இல்லை.
மாறாக தீயிலிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற துரிதமாக செயல்பட்டு தன்னுடன் தூங்கி கொண்டு இருந்த தனது 2 வயதுடைய தங்கையை எழுப்பிய நோவ், அவளை ஜன்னல் வழியாக வெளியே அனுப்பி விட்டு அந்த அறையிலிருந்த தனது செல்லப்பிராணியான நாய் குட்டியையும் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசினான். அதன் பின்னர் சற்றும் தாமதிக்காமல் பக்கத்து அறையில் தூங்கி கொண்டு இருந்த தன்னுடைய மாமா உள்ளிட்ட மற்ற அனைவரையும் எழுப்பியுள்ளான். தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்ட அவர்கள் வீட்டில் ஏற்பட்ட விபரீதத்தை உணர்ந்து, உடனடியாக சிறுவனையும் தூக்கிக்கொண்டு வெளியேறினர்.
அதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சிறுவன் நோவ் மிக கவனமாக செயல்பட்டு தனது குடும்ப உறுப்பினர்கள் 7 பேரையும் காப்பற்றியதை அறிந்து தீயணைப்பு வீரர்கள் ஆச்சரியம் அடைந்த நிலையில் குறித்த சிறுவனை பாராட்டியுள்ளனர். அதைத் தொடர்ந்து பார்டவ் நகர தீயணைப்புத்துறை நிர்வாகம் சிறுவன் நோவுக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது.