சீன கப்பலிலிருந்து உயிருள்ள பூனை ஒன்று கூண்டுக்குள் அடைக்கப்பட்ட நிலையில்சென்னை துறைமுகத்திற்கு வந்து இறங்கியது..!! சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை..!!
சீனா கப்பலில் இருந்து உயிருள்ள பூனை ஒன்று கூண்டுக்குள் அடைக்கப்பட்ட நிலையில் சென்னை துறைமுகத்திற்கு வந்து அடைந்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு சுங்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவின் வுஹானில் இருந்து பரவி வருகின்ற கொடிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடிய கொரோனா வைரஸல் உயிரிழக்கும் அப்பாவி பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுப்பதற்கான முயற்சிகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் சீனாவில் தங்கியிருப்பவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதி இல்லை என கடந்த 11 ஆம் திகதி இந்திய கப்பல்துறை அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 15 அல்லது அதற்கு பிறகு சீனாவில் தங்கியிருந்தவர்கள் நேபாளம், பூடான், பங்களாதேஷ், மியான்மர் எல்லைகள் வழியே ஆகாயம், தரை மற்றும் கடல் வழியாக இந்தியா வர தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை துறைமுகத்திற்கு வந்த சீன கப்பலில் கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் பூனை ஒன்று கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று கப்பல் துறைமுகத்தை வந்தடைந்ததும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். விலங்குகள் பிரத்யேகமாக கொண்டுவரப்படும் கூண்டில் பூனை இருப்பது கண்டறியப்பட்டது. அதையடுத்து அந்த பூனையை சோதனை செய்து அதிகாரிகள் அதை தனிப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.