ஈராக்கில் தொடரும் போராட்டம்…!!! 99 பேர் உயிரிழப்பு…!
ஈராக்கில் அரசின் செயற்பாடுகள் காரணமாக அந்நாட்டில் வேளையின்மை, பொதுச்சேவைகள் ஒழுங்கின்மை, அரசின் இலஞ்சம், ஊழல் போன்றவை அதிகரித்து காணப்படுகின்றது. இந்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலட்சக்கணக்கான ஈராக் மக்கள் கடந்த ஒரு வாரகாலமாக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை வரலாற்றுச் சின்னமான ஈராக் தலைநகர், பாக்தாத்தில் உள்ள தரீர் சதுக்கத்தை நோக்கிப் பல ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றதை தொடர்ந்து பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
அதையடுத்து பொலிஸாரினால் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல், தடியடி பிரயோகம் மற்றும் கட்டுப்பாட்டினை மீறிய போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் பிரயோகம் போன்றன நடத்தப்பட்டது.
இந்த துப்பாக்கிச் பிரயோக சம்பவம் மற்றும் போராட்டம் கடந்த 5 நாள்களாகத் தீவிரம் அடைந்துள்ளது போராட்டத்தில் இதுவரை 99 பேர் உயிரிழந்ததுடன் 4,000 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதுவரை 540 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அதில் 200 பேர் மனித உரிமைகள் ஆணைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர்.
இந்த அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இங்கு தகவல் தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டுள்ளதுடன் தரீர் சதுக்கத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராகத் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அதிபர் பர்ஹம் சாலிஹ் தலைமையிலான ஆட்சி பதவி விலக வேண்டும் என்பதை முதன்மையான கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் உடனடியாக மாயாஜாலம் செய்து இங்கு நடக்கும் பொருளாதார பிரச்சினைகளைச் சீர் செய்ய முடியாது. இவை அனைத்தையும் சரி செய்யச் சிறிது காலம் தேவைப்படும். அதுவரை பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்” என ஈராக் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஈராக்கில் நடக்கும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலுக்கு ஐ.நா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.