செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து முக்கியமான ஏவுகணை சோதனை…!!!!
வடகொரியா தனது அணுசக்தி தடுப்பை மேம்படுத்துவதற்காக செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து முக்கியமான ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. வடகொரிய அரச ஊடகத்திற்கு அந்த நாட்டு பேச்சாளர் ஒருவர் இதனைத் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. வடகொரியாவின் சோஹோ செயற்கைகோள் ஏவுதளத்திலிருந்து கடந்த ஒரு வாரத்திற்குள் மேற்கொள்ளப்படும் இரண்டாவது சோதனை இதுவாகும்.
மேலும் இந்த சோதனை செயற்பாடு நேற்று முன்தினம் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையில் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. வடகொரியா தனது அணுசக்தி திட்டத்தை முழுமையாக கைவிடும் வரை, அந்த நாட்டுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மறுப்பு தெரிவித்துள்ளார். அதேவேளையில் அமெரிக்காவிடமிருந்து இந்த வருட இறுதிக்குள் சில சலுகைகள் கிடைக்காவிட்டால், புதிய வழியை கடைப்பிடிக்க போவதாக வடகொரியா தெரிவித்துள்ளது.