பெர்முடாவை புரட்டி எடுத்த சூறாவளி…!!!
பெர்முடாவில் Humberto சூறாவளி தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு குடியிருப்புகள் இருளில் மூழ்கியுள்ளன. நேற்று கடற்கரையோரங்களில் கனமழையுடன் பலத்த சூறாவளி காற்று வீசியதில் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மேலும் பலத்த காற்று வீசிய காரணமாக மின்கம்பங்கள் சாய்ந்து பல பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இந்த சூறாவளி 28,000 வீடுகள் மற்றும் தொழில்கூடங்கள் மின் இணைப்பு இன்றி இருளில் மூழ்கியதாக அந்நாட்டு மின் விநியோக நிறுவனம் பெல்கோ தெரிவித்துள்ளது. அது மட்டுமின்றி சூறாவளி வீசிய காரணத்தால் சில விமானங்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, ஆம்புலன்ஸும் தயார் நிலையில் வைக்குமாறு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வீடுகளை இழந்த மக்கள், பள்ளிகளில் தற்காலிகமாக தங்கி வருகின்றனர்.
மேலும் இந்த சூறாவளி புயல் வலுப்பெரும் என்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.