சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம், கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இந்த ஆண்டுக்கான சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 30% வரை குறைவு .!
சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் கொடிய கொரோன வைரஸ் தொற்றுக் காரணமாக இந்த ஆண்டுக்கான சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 25 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காடு வரை குறையக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. அதை தொடர்ந்து, சிங்கப்பூரின் பயணத்துறையில் குறிப்பிடத்தக்கப் பாதிப்பு ஏற்படும் என்று அது தெரிவித்தது. கொரோனா வைரஸ் தொற்றால் சீனாவிலிருந்து வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூருக்கு வரும் அனைத்துலகச் சுற்றுப்பயணிகளில் 20 விழுக்காட்டினர் சீன நாட்டவர்.
சீனாவிலிருந்து கடந்த ஆண்டு சுமார் 3.6 மில்லியன் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வந்தனர். அதற்கு முதல் வருடத்துடன் ஒப்புநோக்க அந்த எண்ணிக்கை 12 விழுக்காடு அதிகரித்தது. அத்துடன், சிங்கப்பூரின் ஆக பெரிய வருவாய் சந்தையாக சீனா கடந்த வருடம் திகழ்ந்தது. சீனாவிலிருந்து வந்த சுற்றுப்பயணிகள் சிங்கப்பூரில் சுமார் 3.2 பில்லியன் வெள்ளி செலவு செய்தனர். 2018 ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது 2 விழுக்காடு அதிகம்.
இருப்பினும், அண்மை நிலவரப்படி சராசரியாக நாள் ஒன்றுக்கு 18,000லிருந்து 20,000 வரையிலான அனைத்துலகச் சுற்றுப்பயணிகளை சிங்கப்பூர் இழந்து வருகிறது. அதற்கு பயணத் தடைகள் ஒரு காரணம் என்று பயணத்துறை கழகம் குறிப்பிட்டது. சீனா, சிங்கப்பூர் உட்பட இந்த வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்ட இதர நாடுகளில் நிலரவங்களைப் பொருத்தும் சுற்றுப்பயணிகளின் தேவைகளைப் பொருத்தும் தற்போதைய நிலவரம் மேம்படக்கூடும் என்று கழகம் நம்பியுள்ளது.