10,000 வெள்ளி குறைந்த வருமானம் வாங்கும் குடும்பங்கள் பாலர் கல்விக் கட்டணத்தில் ஆண்டுதோறும் கூடுதல் சலுகைகள்..!!!
சிங்கப்பூரில் சுமார் 10,000 குறைந்த வருமானம் வாங்கும் குடும்பங்கள் பாலர் கல்விக் கட்டணத்தில் வருடம் தோறும் கூடுதல் சலுகைகளைப் பெறவுள்ளனர்.
PCF எனும் மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம், மாணவர்களுக்கு நல்ல தொடக்கத்தை வழங்கும் நிதிக்கு அடுத்த மூன்று வருடமும் ஆண்டுக்கு 2 மில்லியன் வெள்ளியை ஒதுக்கவிருக்கிறது. கல்விக் கட்டணத்தை மேலும் கட்டுப்படியானதாக்க அரசாங்கம் முயற்சிகளை எடுத்து வரும் வேளையில் அந்த நிதி ஒதுக்கீடு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல், அந்த நிதியுதவிக்குத் தகுதி பெறுவதற்கான மாதாந்தரக் குடும்ப வருமான உச்சவரம்பு 2,500 வெள்ளியிலிருந்து 4,500 வெள்ளிக்கு உயர்த்தப்படும். சிசுப் பராமரிப்பு, மழலையர் வகுப்பு போன்றவற்றில் சேர்ந்துள்ள பிள்ளைகளுக்கும் அது பொருந்தும்.
அரசாங்கம் இத்தகைய சலுகைகளை வழங்குவதால், பெற்றோர் முழுநேரக் குழந்தைப் பராமரிப்புக்கு மாதம் 10 வெள்ளி அல்லது அதற்கும் குறைவான கட்டணம் செலுத்துவர்.
அவர்கள் அரை நாள் பாலர் பள்ளிக்கு 5 வெள்ளி அல்லது அதற்கும் குறைவான கட்டணம் செலுத்துவர் எனவும் சிசுப் பராமரிப்புக்குச் சுமார் 100 வெள்ளி அல்லது அதற்கும் குறைவான கட்டணத்தைச் செலுத்துவர் எனவும் கூறப்பட்டது.