மனிதவள அமைச்சின் கட்டாய விடுப்பு விதிமுறைகளை மீறிய 19 நபர்களுக்குத் தண்டனை..!!
சிங்கப்பூரில் மனிதவள அமைச்சின் கட்டாய விடுப்பு விதிமுறைகளை மீறி வேலை அனுமதி அட்டை பெற்றவர்கள், அவர்களின் முதலாளிகள் 19 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொடிய கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வேலை அனுமதி அட்டை வைத்திருந்து அண்மையில் சீனா சென்று வந்தோர் 14 நாள் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டும் என்பது விதியாகும். அதை மீறியதாகப் பிடிபட்ட 10 ஊழியர்களில் 6 பேரின் வேலை உரிமம் ரத்து செய்யப்பட்டது. மனிதவள அமைச்சு, கட்டாய விடுப்பைப் பற்றித் தெரிவித்தும் அது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று சிலர் கூறினர்.
வேலை உரிமம் இரத்து செய்யப்பட்டோர், சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டுள்ளனர். சூதாட்டக் கூடத்திற்குச் சென்றதற்கு வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் வேலை அனுமதி நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டது. வேலை அனுமதி இரத்து செய்யப்பட்ட மூவர் மனிதவள அமைச்சின் அழைப்புகளுக்குப் பதிலளிக்கவில்லை. கட்டாய விடுப்பிலுள்ள ஊழியர்களை எப்போதும் தொடர்பில் வைத்துக்கொள்ளத் தவறிய முதலாளிகளுக்கும் வேலை அனுமதிக்கான சலுகைகள் இரத்து செய்யப்பட்டது.
கட்டாய விடுப்பு விதிமுறைகளை மீறியதற்கு இதுவரை 14 ஊழியர்கள், 15 முதலாளிகள் ஆகியோர் மீது மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டாய விடுப்பின் விதிகளைப் பின்பற்றுவது ஊழியர்கள், முதலாளிகள், இருதரப்பினரின் கடமை என்பதை அமைச்சு வலியுறுத்தியது
.