சீனாவில் நேற்று மட்டும் கொடிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு 86 பேர் பலி..!!
சீனாவை புரட்டி எடுக்கும் கொடிய கொரோனா வைரஸ் இன்று உலகெங்கும் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. அதனை தடுக்கும் நோக்கில் வைத்தியர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த கொடிய வைரசுக்கு எந்தவொரு மருந்தும் கண்டு பிடிக்கப்படவில்லை. இருப்பினும் வைத்தியர்கள் தங்கள் முழு முயற்சியையும் கைவிடமால் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், நேற்றைய தினம் சுமார் 86 பேர், கொரோனா வைரஸால் உலக சுகாதர மையத்தின் சீனாவுக்கான அதிகாரி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். நேற்று வரை, 638 ஆக இருந்த இறப்பின் எண்ணிக்கை தற்போது 722 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் ஒரே நாளில், சீனாவில் மட்டும் சுமார் 86 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இரண்டு பேர் பிலிப்பைன்ஸ் மற்றும் ஹாங் காங்கில் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,478 லிருந்து 34,546 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா வைரஸால் பல உயிரிழப்புகள் ஏற்படுவதால் மக்களிடையே அதிக பதற்றம் நிலவி வருகிறது.
ஜப்பான் கப்பல் ஒன்றில், ஏற்கெனவே 61 பேர் கொடிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 பேர் கொரோனாவால் பதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிகழ்வால், சீனாவை தொடர்ந்து கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பானே இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளான, மலேசியாவில் 15, தாய்வானில் 17, அரபு நாடுகளில் ஏழு மற்றும் தாய்லாந்திலும் ஏழாக உயர்ந்துள்ளது.
சீனாவில் நாளுக்கு நாள் பல்வேறு மரணங்கள் நடந்து வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் சீன அரசாங்கத்தை எதிர்த்து சமூக வளைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த கொடிய கொரோனா வைரஸை முதலில் கண்டறிந்த, மருத்துவர் லி வென்லியாங் மரணத்திற்கு சீன அரசாங்கம் பதில் அளிக்க வேண்டும் என்றும் ஊடகங்களுக்கு விதித்த தணிக்கையை முன்னிட்டு தங்களுக்கு பேச்சுரிமை வேண்டும் என்றும் சீன மக்கள் தங்கள் கருத்துக்களை சமூக வளைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
சீனாவில் எறும்பு திண்ணிகளாலும் கொரோனா வைரஸ் பரவுவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடத்திய ஆராய்ச்சியில் எறும்புத் திண்ணியிலிருந்து எடுக்கப்பட்ட கொரோனா வைரஸின் மரபணுக்கள், பாதிக்கப்பட்டவர்களின் மரபணுக்களுடன் 99 சதவிகிதம் ஒத்துப் போவதாக கண்டறியப்பட்டுள்ளது. சீன சந்தைகளில் எறும்புத் திண்ணிகள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவது, அதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
1000 பேர் தங்கும் வசதியுடைய மருத்துவமனை, 6 நாட்களில் கட்டப்பட்டு, கடந்த பிப்ரவரி 3 ஆம் திகதி திறக்கப்பட்ட நிலையில், சீன அரசாங்கம் மேலும் ஒரு புதிய மருத்துவமனையை குறுகிய தினங்களுக்கு கட்டியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் படி, இந்த மருத்துவமனை 12 நாட்களில் கட்டப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. 1500 பேர் தங்கும் வசதியுடைய இந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோயாளிகள் இன்றுமுதல் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.